Puttalam-Mirror | The Truth

பிரதான செய்திகள்




சுஐப் எம்.காசிம் -

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு ஒரு ஆசனத்தை இழப்பதா? என்பதுதான் இணக்க அரசியலுக்கான இந்த வித்து இங்கு விதைக்கப்பட்டதற்கான காரணம். 

முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் தெரிவான மாவட்டமிது. நிதியமைச்சர் நெய்னா மரிக்காரை ஈன்ற மண்ணிது. இங்கு ஒரு பிரதிநிதியை இழப்பது, சமூக அரசியல் அடையாளத்துக்கான தோல்வியாகவே பார்க்கப்படும். மட்டுமல்ல பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகும் மாவட்டமாகவும் பிறரால் இது பார்க்கப்படாலாம் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகள். முப்பது வருடங்களாக மக்களால் தெரிவாகும் எம்.பியின்றிக் கிடந்த இந்த மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான பல முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும், நகரபிதா பாயிஸ் தலைமையிலான குழு, ஒட்டகச் சின்னத்திலும் போட்டியிட்டு, சமூக அடையாளத்தை வென்றெடுக்க முயற்சித்தன. எனினும், இந்த முயற்சிகள் இரு தரப்பிற்கும் கைகூடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சொற்ப வாக்குகளால் நவவி சமூக அடையாளத்துக்கான வாய்ப்பை இழந்தமை பெரும் வேதனை. இதனால்தான் என்ன விலை கொடுத்தும், இம்முறை முஸ்லிம் சமூக அடையாளம் வெல்லப்பட வேண்டுமென்ற சிந்தனைத் தீவிரம், எல்லோரையும் ஓரணியில் இணைத்திருக்கிறது. 

வடபுலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையே அரவணைத்து, ஆறுதலளித்ததால் முஸ்லிம் சமூகம் தனித்த ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்ட மாவட்டத்தில், அடையாள அரசியல் இல்லாமல் செய்யப்படுவதை ஏற்க முடியாதே! இந்த எண்ணங்கள்தான் எல்லோரையும் இணைத்துள்ளது. 
புலம்பெயர்வது இஸ்லாமிய வரலாற்றுக்குப் புதிய விடயமல்ல. இறைதூதர் முஹம்மது நபியவர்கள், தனது பிறப்பிடமான மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தது முதல் இவ்வரலாறுகள் நீள்கிறது. ஆனால், வெவ்வேறு பின்னணிகள் இப்புலப்பெயர்வுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. ஒரு இனமே அடையாளம் காணப்படுவதற்கு அடிகோலிய புத்தளம் மாவட்டம் ஒன்றிணைந்துள்ளமை சாதாரண சின்னத்திலல்ல, தராசு சின்னத்தில். அரபியில் "மீசான்" எனப்படும் இச்சின்னம், முஸ்லிம்களின் மத, மறுமை உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மரணித்த பின்னர் மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் மறுமைநாளில், உலக வாழ்க்கையில் செய்த நன்மை, தீமைகளை அளந்து நிறுத்துப்பார்க்கவும், பட்டோலை (சொர்க்கமா, நரகமா) என்ற தீர்ப்புப் பத்திரம் வழங்கப்படுவதும் இந்த தராசின் "மீசான்" நிறுவையில்தான் என்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கை. புனித வேத நூலான திருக்குர்ஆனும் "அளவை, நிறுவைகளில் மோசடி செய்யாதீர்" என எச்சரிக்கும் வசனமும் இந்த "மீசானையே" ஞாபகமூட்டுகிறது. எனவே, எதிர்பார்ப்பதுபோல இந்த முயற்சியை சமூகத்தின் அமானிதமாக அடையாளப்படுத்த, "மீசான்" என்ற சொற்பிரயோகத்தை முஸ்லிம் தலைவர்கள் தாராளமாக உச்சரிப்பர். மற்றும் இச்சின்னம் முஸ்லிம் அரசியலுக்குப் புதியதுமில்லை.

1987 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசுச் சின்னத்தையே தெரிவு செய்திருந்தது. கட்சி அங்கீகரிக்கப்படாத அன்றைய சூழலில், சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிக்கு வேறு சின்னம் இருக்கவில்லை. இது மட்டுமா? முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், தனது முஸ்லிம் கட்சிக்கான சின்னமாகவும் இந்த தராசையே "மீசான்" தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் இந்த முயற்சியின் எடைகள் கனதியாகுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரபல அரசியல் புள்ளிகள் இவ்வணிக்குப் பலம் சேர்த்துள்ளனர். நகரபிதா பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஹியா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தாஹிர், புத்தளம் நகர சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்ரி, ஐ.தே.க அலிகான், மக்கள் காங்கிரஸ் முஸம்மில் உள்ளிட்ட பலரின் உள்வாங்கல்கள், முஸ்லிம் சமூக அரசியல் அடையாளத்தை இம்முறை புத்தளத்தில் வென்றெடுக்கவே செய்யும். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிகளும் தத்தமது அணிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை "தாயும் பிள்ளையானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதை உணர்த்தியுள்ளது. முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு குறுக்காகக் களமிறக்கப்பட்டுள்ள இவர்களை, இம்மூன்று கட்சிகளும் களமிறக்கக் காரணமென்ன? இதுதான் புத்தளம் மாவட்டம் எங்கும் எதிரொலிக்கும் முஸ்லிம்களின் ஆதங்கங்கள். இந்த மாவட்டத்தின் மகிமை, மகத்துவம் என்பவற்றைக் கௌரவித்துத்தான், கே.ஏ. பாயிஸை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எம்.பியாக்கி அழகுபடுத்தின. ஆனால், இந்த அரசியல் அழகு சமூக அடையாளமாக வேண்டுமென்றே புத்தளம் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். 

முப்பது வருடங்களுக்கு மேலாக, வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு அகதியாக வாழ்ந்த முஸ்லிம்கள், பிறப்பத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணம் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இழந்துள்ளனர். இதனால் இவ்வகதிகள் புத்தளத்தில்தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரமாக, அடையாளமாக புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டும். இந்த வெற்றியை வீழ்த்தும் வேட்டுக்களாக, வேறு கட்சிகளால் தராசுக்கு "மீசான்" வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது, சகோதரத்துவ மண்ணுக்கு செய்யும் சதியாகவே அளக்கப்படும். 

வடபுலத்து மக்களின் வெளியேற்றம் புத்தளத்தை எப்படிச் சகோதரத்துவப் பிணைப்பில் இணைத்ததென்பதற்கு, முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் கவிதைகள் சாட்சி. "தோப்பு வீழ்ந்து தோழமையானது" என்ற அவரது அழகிய கவிவரிகள், புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கருணையை எடுத்துக்காட்டும் அற்புதக் கவிநயம். அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் குடிசைகளில், கூடாரங்களில் குடியமர்த்துவதற்கு, கற்பிட்டிப் பிரதேசத்தில் ஓங்கி, உயர்ந்து நின்ற தென்னந்தோப்புக்களை வெட்டி, வீழ்த்தி தட்டாந்தரையில் குடிசைகள் அமைத்ததை, மர்ஹும் அஸ்வரின் கவிநயங்கள் எமது மனக்கண்கள் முன் கொண்டு வருகின்றன. அங்கிருந்த மணற்பாங்கான பிரதேசத்தில் வாழ்வியல் இருப்புக்களை அமைக்கும் பணியிலீடுபட்டிருந்தோரின் பாதங்கள் மண்ணுள் புதைந்தன. இவை வரவேற்புக்களால் வீசப்பட்ட மலர்க் குவியல்களுக்குள் நுழைந்த பாதங்கள் என்றார் மர்ஹும் அஸ்வர். 

இப்பணிகளில் மர்ஹும் அஷ்ரபின் பங்களிப்புக்களும் பெறுமதியானதால்தான், இம்மாவட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சமூக அரசியல் அடையாளம் மீண்டும் உயிர்ப்பெற ஆரம்பித்தது. இந்த மீசானால் அளக்கப்படும் முயற்சிகள் சாத்தியமற்றுப் போக எந்தச் சந்தர்ப்பங்களும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் தொகுதியை வைத்தே, வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.


கொவிட் - 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.

முந்தல்  வைத்தியசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு நேற்று  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுள்ளது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் உயிரிழந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இலங்கையில் இன்று (10) இதுவரையில் மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

இன்றைய தினமே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாகவும் மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைது ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது, 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 472 பேர் இருப்பதுடன் 204 அதிகாரிகள் சேவை செய்வதாகவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

அத்துடன் அங்கு சேவையாற்றிய 90 பேர் விடுமுறைகளுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆலோசகரின் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என புத்தளம் மாவட்ட சுகாதார பரிசோதகர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


கந்த காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

நாங்கள் இனவாதிகளோ!, பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால் பறித்தெடுக்கப்பட்ட நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய உப தலைவரும், முதலைப்பாளி வட்டார அமைப்பாளருமான தௌபீக் அவர்களின் ஏற்பாட்டில் தராசு சின்னத்தில் இலக்கம் 7ல் போட்டியிடும் ஆப்தீன் எஹியா அவர்களை ஆதரித்து நேற்று (09) முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

30 வருடங்களாக நாம் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களித்தோம். ஆனால் புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படுவதில்லை. எமது விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் தொகுதிக்கு வெளியிலுள்ள பெரும்பான்மையினரே பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். எமது விருப்பு வாக்குகளால் தெரிவானவர்கள் எமது உரிமைகளையும், அபிலாசைகளையும் பறித்தெடுப்பதிலும்,ஆக்கிரமிப்புக்களை செய்வதிலும், எமது பிராந்தியத்தில் குடியேற்றுவதிலுமே ஈடுபாடு காட்டினர்.
தற்போது எம்மிடம் எஞ்சியுள்ளது விவசாய நிலங்கள் மாத்திரமே. அனைத்து நிலங்களையும் (உப்புளக் காணிகள், அரச காணிகள், கடல் நிலங்கள்) பறித்து எமது மக்களுக்கானதைப் பறித்து சில தொழிலதிபர்களுடன் இணைந்து பங்கிட்டு இலாபம் அடைந்து கொண்டனர்.


22 ஆண்டுகள் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதிலேயே எமது அரசியலை ஆரம்பம் செய்து வெற்றி பெறாவிட்டாலும் தேசிய பட்டியல் மூலம் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அதிகாரம் கிடைத்தது. அதனை துஷ்பிரயோகம் செய்தனர். எமது இனத்துக்காக இழந்த பாராளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுக்க எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களை முகம்கொடுக்க அவர்களால் முடியாமல் போனது. எவ்வித திட்டங்களும் அவர்களிடம்; இல்லை. இழந்த பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கோசங்களை மாத்திரமே கைவசம் வைத்திருந்தனர்.

தற்போதும் அதே கோசங்களுடன் எம்மிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் எமது பிரச்சினைகளுக்கான எவ்விதமான தீர்வும் இல்லை. எமது பிரச்சினைகள் என்வென்பது குறித்த தெளிவு கூட அவர்களிடம் இருக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.

நாம் எமது மக்களின் பிரச்சினைகளை மக்களுடன் இருந்து இணங்கண்டுள்ளோம். பொலிஸிலும், பிரதேச செயலகங்களிலும், எமது நிலை என்னவென்பது குறித்து நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எமது மக்களை அவர்கள் வழிநடத்துக்கின்ற விதம் என்னவென்பது பற்றி நாங்கள் தினந்தினம் காண்கிறோம். பிரதேச செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், என பல கிலோ மீற்றர்கள் எமது மக்கள் பிரயாணிக்க வேண்டிய நிலையே இன்றுள்ளது. எமது வாழ்வாதாரத்தை பிரயாணத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுத் திட்டங்களுடனேயே நாம் தேர்தல் களத்தில் வாக்குக் கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களாக ஆஸிக், அக்மல், றிபாஸ் நஸீர், பௌஸான், முன்னால் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஷாபி, முதலைப்பாளி பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் மக்கீன், செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஊடகப் பிரிவு)



Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget